பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் அருகே விவசாய கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி, விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது மனைவி பூங்காவனம் (75). இவர் கல்லேரிப்பட்டி முருகன் மலை அடிவாரப் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாயை பார்க்க வீட்டிற்கு வந்த மகள், பூங்காவனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பூங்காவனம் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் பெண்ணின் உடல் மிதப்பதாக வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பூங்காவனம் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.